இயேசுவின் போதனைகள்
பாகம் 6: ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது
பாகம் 6: ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது
முந்தைய பாகம்: பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளை
கடந்த முறை, கர்த்தர், ஐயாயிரம் குடும்பம் இருந்த ஜனக்கூட்டத்திற்கு சாப்பாடு ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற பொழுது, சீஷர்களுக்கு உடனே தங்களிடமிருந்த பணம் தான் நியாபகத்திற்கு வந்தது, அதனால் தான் நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள்[மாற்கு 6:37], ஆனால் கர்த்தரின் மகிமையை கண்ட பின்பு சீடர்களிடம் மிகப்பெரிய மாற்றம் இருந்தது, அதனால் இந்த முறை நாலாயிரம் குடும்பம் இருந்த ஜனக்கூட்டத்திற்கு சாப்பாடு தேவை என்ற பொழுது, அவர்கள் பணத்தை குறித்து ஒன்றுமே பேசவில்லை, அது பெரிய மாற்றம் தானே! - 1அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: 2ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; 3இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 4அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். 5அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். 6அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 7சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். 8அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 9சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார் - மாற்கு 8:1-9
மேலும், கர்த்தர் ஐயாயிரம் பேரை போஷித்த பொழுது 12 கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை எடுத்த சீஷர்கள், இந்த முறை 7 கூடைகள் நிறைய மீதியான துணிக்கைகளை மாத்திரமே எடுத்தார்களாம், அப்படியென்றால் 12 சீஷர்களில், 5 பேர் மீதம் ஒன்றும் எடுக்காமல் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார்கள் என்று தானே அர்த்தம்.
கடந்த முறை 12 சீஷர்களும் கூடையோடு நின்ற பொழுது, கர்த்தர் அவர்களோடு பயணம் செய்யவில்லை, சீஷர்களின் படவும் புயலில் சிக்க நேர்ந்தது.
ஆனால், இந்த முறை தங்களுக்கென்று ஒன்றையும் எடுக்காத 5 சீஷர்களின் நிமித்தமாக அவர்களோடு பயணம் செய்தார், அவர்கள் சேர்ந்த இடம் தல்மனூத்தாவின் எல்லையாய் இருந்தது, அவர்களிடம் 7 கூடை அப்பமும் இருந்தது 10உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார் - மாற்கு 8:10-13
தல்மனூத்தாவில் கர்த்தரின் உபதேசம், ஒரு ஏச்சரிப்பின் சத்தமாகவே இருந்தது, அதை கேட்ட சீஷர்கள், இயேசு கிறிஸ்து மாத்திரம் நமக்கு போதும் என்று சொல்லி, தங்களிடமிருந்த ஏழு கூடைகளை, இது தேவையில்லை என்று தல்மனூத்தாவின் கடற்கரையிலேயே வைத்து விட்டு கர்த்தரோடு படவேறினார்களாம்.
ஆனால் அது "உதறி விட்டு போனார்கள்" என்பதற்கு பதிலாக "மறந்து விட்டு போனார்கள்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - 14சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள் [மூலபாஷையில், உதறி விட்டு போனார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது]; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:14
வேண்டாம் என்று 7 கூடைகளையும் உதறி விட்டு போனார்கள் என்பதே சரியான மொழிபெயர்ப்பு, நம்மில் அநேகருக்கு படவேறின அனுபவம் இருக்க தான் செய்யும், படவேறினவுடன் நாம் முதலாவது பார்ப்பது, கடற்கரையே, அங்கு முதலாவது நம் கண்ணில் படுவது நாம் விட்டு வந்த பொருட்களே, அப்படியென்றால் சீஷர்கள் அந்த 7 கூடைகளையும் பார்த்திருப்பார்கள், ஆனாலும் அவர்களுக்குள் ஒரு மாற்றம், ஒரு வெளிப்பாடு, கர்த்தர் நம்மோடு இருக்கும் பொழுது இந்த உலக காரியங்களை தூக்கி கொண்டு அலைய கூடாது என்பதை புரிந்துக் கொண்டார்கள், அந்த 7 கூடைகளையும் தல்மனூத்தாவின் கரையிலேயே விட்டு விட்டார்கள்
அப்படி சீஷர்கள் தன் உலக காரியங்களை உதறி விட்டு, இயேசு கிறிஸ்து மாத்திரமே போதும் என்று மாறினதை தான் "படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று வேதாகமம் சொல்லுகிறது, அந்த ஒரு அப்பம் இயேசு கிறிஸ்துவே!
அடுத்த பாகம்: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது