என்னைத் தொடாதே
என்னைத் தொடாதே
இயேசு கிறிஸ்துவே நமக்கு மெய்யான மகா பரிசுத்த பலிபீடமாய் இருக்கும் பொழுது, அவரை தொட்டு பரிசுத்தத்தையும் சுகத்தையும் பெற்றுக் கொள்வது நமது கடமையாய் இருக்கிறது - 36.பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய். 37.ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும் - யாத்திராகமம் 29:36-37
அது மாத்திரம் இல்லாமல், நாம் தேவனை தடவியாகிலும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது - 26.மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். 27.கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே - அப்போஸ்தலர் 17:26-27
காரியம் இப்படி இருக்கும் பொழுது, தன்னை தேடி வந்த மகதலேனா மரியாளிடம் கர்த்தர் "என்னைத் தொடாதே" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? தன்னை யாரும் தொடக்கூடாது என்பது கர்த்தரின் நோக்கமாக இருந்திருக்குமானால், மகதலேனா மரியாள் தன்னை நெருங்க முடியாத தூரத்திலோ அல்லது மலையின் மேல் இருந்தவாரோ தரிசனம் தந்திருப்பரே - 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:15-17
அது மாத்திரம் இல்லாமல், ஒரு குஷ்டரோகியை தொட்டால், தோடுகிற மனஷன் தீட்டுபட்டவனாக மாறி விடுவான் [தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான் - லேவியராகமம் 5:3], ஆனால் இயேசு கிறிஸ்து ஒரு குஷ்டரோகியை தொட்ட பொழுது, கர்த்தரிடமிருந்த புறப்பட்ட பரிசுத்தம் அந்த குஷ்டரோகியை சுத்தமாக்கி விட்டது, இப்படிபட்ட வல்லமையுள்ள தேவன், மகதலேனா மரியாளிடம் "என்னைத் தொடாதே" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் - மாற்கு 1:40-42
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை யார் வேண்டுமானாலும் தொடலாம் என்பதை கெனேசரேத்து நாட்டினர் செய்து காட்டியிருக்கிறார்கள் - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
காரியம் இப்படி இருக்கும் பொழுது, கர்த்தர் மகதலேனா மரியாளிடம் "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? - இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:17
ஒரு சின்ன உதாரணத்தோடு பார்த்தால் இதை எளிதாக புரிந்துக் கொள்ளலாம், ஒரு சிறு பையன் கார் ஓட்டும் தன் தகப்பனுக்கு ஒரு ஐஸ்க்ரீம் கொடுக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது அந்த தகப்பன் "கொடுக்காதே" என்று சொன்னால் எனக்கு ஐஸ்க்ரீம் வேண்டாம் என்று அர்த்தம், அதே சமயத்தில் "கொடுக்காதே, நான் இன்னும் வண்டியை நிறுத்தவில்லை" என்றால், நான் வண்டியை நிறுத்தினவுடன் எனக்கு ஐஸ்க்ரீம் கொடு என்று அர்த்தம்.
அது போல தான், நம் கர்த்தர் "என்னைத் தொடாதே" என்று சொல்லாமல், "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னார், ஏனென்றால் நம் கர்த்தர் பிதாவினிடத்திற்கு ஏறிப்போன பின்பும், அதாவது பரலோகத்திற்கு சென்ற பின்பும் நாம் அவரை தொட முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான் "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னார்.
மேலும் மகதலேனா மரியாள் மாத்திரம் அல்ல, நாமும் அவரை தொட்டு சுகத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக தான் "நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு" என்றும் கட்டளையிட்டார்.
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அவர் பூமியில் இருக்கும் பொழுது கெனேசரேத்து நாட்டை சேர்ந்த பிணியாளிகளெல்லாரும் தொட்டு சுகம் பெற முடியும் என்றால், பரலோகத்தில் இருக்கும் அவரை நாம் தொட்டு சுகம் பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, நமக்காக தன் ஜீவனையே தந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு தொடுவோம், பரிபூரண சுகம் பெறுவோம் - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் - எபிரெயர் 13:8
என்னைத் தொட்டுப்பாருங்கள்
மரித்து உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து, தன் சீஷர்களிடம் சொன்ன ஒரு காரியம் என்னவென்றால் "என்னைத் தொட்டுப்பாருங்கள்" என்பதாகும் - 36.இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37.அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39.நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40.தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார் - லூக்கா 24:36-40
இங்கு நம் கர்த்தர் "என்னைத் தொட்டுப்பாருங்கள்" என்று சொன்னதின் அர்த்தம் என்ன? ஒரு பொருளை "பார்த்து" ஊர்ஜிதம் செய்ய முடியாத சூழ்நிலையில், "தொட்டுப்பார்த்து" ஊர்ஜிதம் செய்வது வழக்கம், உதாரணத்திற்கு ஒருவர் காய்ச்சலால் வேதனைப்படும் பொழுது, அவரை தொட்டுப்பார்த்து தான் காய்ச்சல் அளவை உறுதி செய்ய முடியும், எப்படியென்றால் அவரின் சரீரத்தில் இருந்து வெளிப்படும் சூடு அவரின் காய்ச்சல் அளவை காட்டிக்கொடுக்கும்.
இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில், கர்த்தரை விசுவாசத்தோடு தொட்ட பொழுது, கர்த்தரிடமிருந்து வல்லமை புறப்பட்டது என்பதை வேதாகமத்தில் பார்க்கிறோம், மேலும் கர்த்தரிடமிருந்து வல்லமை புறப்பட்ட வல்லமை தொட்டவர்களையெல்லாம் சுகமாக்கினது என்றும் பார்க்கிறோம், அப்படியேன்றால், மரித்து உயிர்த்தெழுந்த பிறகு "என்னைத் தொட்டுப்பாருங்கள்" என்று சொன்னவரை, நாம் விசுவாசத்தோடு தொடும் பொழுது, கர்த்தரின் வல்லமை நம்மை சுகமாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு தொடுவோம், பரிபூரண சுகம் பெறுவோம்.