இயேசுவின் போதனைகள்
பாகம் 1: சாப்பிடவும் சமயமில்லை
பாகம் 1: சாப்பிடவும் சமயமில்லை
முன்னுரை: இயேசுவின் போதனைகள்
இயேசு கிறிஸ்து, பன்னிரண்டு பேரை அப்போஸ்தல ஊழியத்திற்காக தெரிந்துக் கொண்ட பொழுது, சீஷர்களுக்கு சாப்பிடவும் நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுவதில் அர்த்தம் என்ன? - 13.பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். 14.அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15.வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16.அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். 17.செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். 18.அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19.அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. 20.பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் - மாற்கு 3:13-20
சீஷர்களுக்கு, இயேசு கிறிஸ்து தான் சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதும், நாம் நித்திய ஜீவனை சுதந்தரிக்க சிலுவையில் தன்னையே அர்ப்பணிக்கும் அன்பின் தேவன் என்பதும் தெரியாது, அதனால், கர்த்தரோடு ஐக்கியமாய் இருப்பதை காட்டிலும், உலக மக்களின் ஐக்கியமே பெரிதாய் தோன்றியது, இதை தான் மார்க், ஜனங்கள் கூடிவந்ததால் சீஷர்களுக்கு சாப்பிடவும் நேரமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும், கர்த்தர் தன் சீஷர்களுடன், ஒரு சாதாரண மனிதனாக தான் வாழ்ந்து வந்தார், இவர் தான் சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்று யாராவது சொன்னால் கூட நம்ப முடியாத அளவுக்கு அவர் எல்லோரையும் போல சாதாரண வஸ்திரம் தரித்தவராக தான் இருந்தார்.
ஆனால், சீஷர்களுடன் கர்த்தர் இருப்பது போல சித்தரிக்கும் படங்களில், கர்த்தர் மாத்திரம் விலையுர்ந்த வஸ்திரம் தரித்தவராகவும், மற்ற சீஷர்கள் எல்லோரும் சாதாரண வஸ்திரம் தரித்தவராகவும் இருப்பதை பார்க்கலாம், அது முற்றிலும் வேதத்திற்கு மாறானது, மற்றவர்களை காட்டிலும் கர்த்தர் வித்தியாசமாக இருந்திப்பாரானால், யூதர்கள் ஏன் இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்க யூதாசுக்கு பணம் கொடுக்க வேண்டும்? போர்சேவர்களிடம் இயேசுவின் அடையாளத்தை சொல்லி, அவர்களில் ஒருவர் மாத்திரம் வெண்மையான உடை உடுத்தியிருப்பார் அவரை கைது செய்து கொண்டு வாருங்கள் என்று தானே சொல்லியிருப்பார்கள்!
ஒரு செல்வந்தரின் மகனோ, அல்லது தேசத்தை ஆளுபவரின் மகனோ, தன் நண்பர்களுக்கு, தன் குடும்ப பெருமைகளையும், மற்றவர்கள் தனக்கு செலுத்தும் கனத்தையும் காண்பிப்பது இவ்வுலக வழக்கம், ஆனால், கர்த்தர் தன் சீஷர்களுக்கு செய்து காட்டிய முதல் அனுபவ பாடமே, குடும்பத்தாரும் மற்றவர்களும் தன்னை குறித்து இகழ்ந்து பேசுவதே! அதாவது இவ்வுலகம் நம்மை அங்கீகரிக்காது, உறவினர் நம்மை தவறாக பேசுவார்கள், இவுலகத்தார் நம்மை அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்றும் சொல்லுவார்கள் என்பதே கர்த்தர் தன் சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்த முதல் பாடமாய் இருக்கிறது - 21.அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். 22.எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 23.அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? 24.ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. 25.ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. 26.சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. 27.பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். 28.மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
29.ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். 30.அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார் - மாற்கு 3:21-30
அதன் பின்பு, கர்த்தர் சொல்லிக் கொடுத்த இரண்டாவது பாடம், சொந்த பந்தங்கள் நம் குடும்பத்தார் அல்ல, கர்த்தரை நேசிப்பவர்களே நம்முடைய குடும்பத்தார் என்பதாகும், அதையும் மீறி "இவர்கள் எங்கள் உறவினர்கள்" என்றும், "இவர்கள் எங்கள் ரத்த சொந்த பந்தங்கள்" என்றும், "இவர்கள் எங்கள் ஜாதியார்" என்றும் சொல்லி கொண்டிருப்போமானால், அது ஆபத்தாக தான் முடியும் - 31.அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32.அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34.தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35.தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் - மாற்கு 3:31-35
அடுத்த பாகம்: அக்கரைக்குப் போவோம் வாருங்கள்