தேவ ஆவியானவர், மத்தேயு மற்றும் லூக்கா மூலமாக எழுதி தந்த இயேசு கிறிஸ்துவின் சுவிஷேச புஸ்தகங்களைக் காட்டிலும், மாற்கு மற்றும் யோவான் மூலமாக எழுதி தந்த சுவிஷேச புஸ்தகங்கள் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறது, எப்படியெனில், மத்தேயு மற்றும் லூக்கா சுவிஷேச புஸ்தகங்கள், இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வரத் தெரிந்து கொண்ட பாத்திரமாகிய மரியாளையும், அவள் புருஷனாகிய யோசேப்பையும், அவர்களின் குடும்ப வம்சத்தையும் ஒரு முன்னுரையாக சொல்லியிருக்கும் பொழுது, மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள் இயேசு கிறிஸ்துக்கும் பரலோக தேவனுக்கும் இடையேயான உறவை மாத்திரம் சொல்லித் துவங்குகிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்த பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்தங்கள் எப்படி நிறைவேறினது என்பதை அறிவிப்பது அவசியமாகையால், மத்தேயு மற்றும் லூக்கா சுவிஷேச புஸ்தகங்கள், கர்த்தர் பிறந்த குடும்பத்தை பற்றி ஒரு முன்னுரையாக சொல்லியிருக்கின்றன, ஆனால், மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள், மரியாளை பற்றியோ அல்லது யோசேப்பை பற்றியோ அதிகமாய் ஒன்றும் சொல்லவில்லை, காரணம், நமக்கு ஒரு விலையுர்ந்த பரிசு வெளிநாட்டிலிருந்து வருமானால், அந்த பரிசை மிகவும் பிரயாசப்பட்டு அனுப்பினவருக்கு நன்றி சொல்ல வேண்டுமேயன்றி, அந்த பரிசை கையில் கொடுத்த தபால்காரருக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அது போலவே, மாற்கு மற்றும் யோவான் சுவிஷேச புஸ்தகங்கள், நம்முடைய ஆத்ம ரட்சிப்புக்காக தன்னுடைய சொந்த குமாரனையே தந்த பரலோக தேவனை மாத்திரம் பிரசித்தப்படுத்தி, அவருக்கே நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், கர்த்தரை கருவில் சுமந்த மரியாளினாலோ அல்லது மரியாளின் புருஷனாகிய யோசேப்பினாலோ, அல்லது அவர்களின் வம்சத்தினாலோ, நம்முடைய ஆத்ம இரட்சிப்புக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதால் அவர்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.
இதில், மாற்கு சுவிஷேச புஸ்தகமானது, "தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்" என்று ஆரம்பித்து, இயேசு கிறிஸ்து பரலோக தேவனுடைய நேசகுமாரன் என்கிற உறவை மாத்திரமே சொல்லித் துவங்குகிறது - 9.அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10.அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். 11.அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று - மாற்கு 1:9-11
அக்காலத்தில், சுவிஷேச புஸ்தகங்கம் தனித்தனியாக தான் எழுதப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன, அதனால், இந்த மாற்கு சுவிஷேசத்தை மாத்திரம் படிக்கும் சபையாரிடம், இயேசு கிறிஸ்துவின் பெற்றோர் யார்? என்று கேட்டால், பரலோகத்தின் தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் பிதா என்று பதில் சொல்லுவார்கள், ஆனால், இந்த யோவான் சுவிஷேசத்தை மாத்திரம் படிக்கும் சபையாரிடம், கர்த்தர் பிறந்து வளர்ந்த குடும்பத்தை குறித்துக் கேட்டால், பரலோகத்தின் தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் தாயும் தந்தையும் என்று பதில் சொல்லுவார்கள், ஏனென்றால், யோவான் சுவிஷேச புஸ்தகமானது, பரலோகத்தின் தேவனை இயேசு கிறிஸ்துவின் தாயாகவும், அதாவது தாயின் மடியிலிருக்கிறது குழந்தையை போல, பிதாவின் மடியிலிருக்கிற இயேசு கிறிஸ்து என்று கற்றுக் கொடுக்கிறது, ஆனால், இந்த யோவான் சுவிஷேச புஸ்தகமானது ஒரு இடத்தில் கூட "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சொல்ல வில்லை - 14.அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15.யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16.அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். 17.எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18.தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:14-18
தொடர்ந்து படிக்க இதுமுதல் காண்பீர்கள்
முந்தைய பாகத்தை படிக்க மோசேயின் இரண்டு தாயார்கள்