இப்படி இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் பரலோகத்தின் தேவனை வெளிப்படுத்துவேன் என்று அறிவித்த பின்பு, சொல்லப்பட்டது தான் இந்த "கானா ஊர் கலியாணம்" என்கிற அழகான சம்பவம், இந்த கானா ஊர் கலியாணத்தை, உலக அனுபவத்தோடு படிக்கும் பொழுது ஒரு விளக்கத்தையும், அதே சமயத்தில், இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணின "இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள்" என்பதை அடிப்படையாக கொண்டு படிக்கும் பொழுது பரலோக ராஜ்யத்திற்கான விளக்கத்தையும் கொடுக்கிறது, அதனால் கலியாணம் என்றவுடனே, நம் நினைவுகள் நம்மை ஒரு கல்யாண மண்டபத்திற்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்காமல், சற்று நிதானமாய் ஆராய்ந்து, நம் இருதயத்தை இயேசு கிறிஸ்து சொன்ன "இதுமுதல் தேவதூதர்களை காண்பீர்கள்" என்கிற வாக்குத்தத்தை நோக்கி திருப்புவோம் - 1.மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் - யோவான் 2:1-2
இந்த "கானா" என்கிற கிராமம் இஸ்ரவேல் தேசத்தில் இன்றைக்கும் இருக்கிறது, அது கலிலேயா கடலிலிருந்து ஏறக்குறைய 18 கிமீ தொலைவில் இருக்கிறது, ஆனால் வேதாகமம் சொல்லும் "கலிலேயாவிலுள்ள கானா" என்பது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் சுதந்தரிக்கும் பரலோக ராஜ்ஜியத்தை குறிக்கிறது - உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார் - சங்கீதம் 105:11
மேலும் அந்த கானா ஊர் கலியாணத்தில், இயேசுவின் தாய் அங்கேயிருந்தார் என்பது, கர்த்தரை நமக்குத் தந்த பரலோக தேவனையே குறிக்கிறது, ஏனென்றால் அவரே எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர், அவரே தன் குமாரனுக்காக அந்த கலியாணத்தையும் ஏற்படுத்தியிருந்தார், அதனால் தான் மூலபாஷையாகிய கிரேக்க மொழியில் "இயேசுவின் தாயும் தாய் அங்கேயிருந்தார்" என்று எழுதப்பட்டுள்ளது, அதாவது ஏக சக்கராதிபதியாய், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவராய் பரலோகத்தில் வீற்றிருப்பதை இப்படி அழகாக "இயேசுவின் தாய் அங்கேயிருந்தார்" என்று தேவ ஆவியானவர் எழுதியுள்ளார்.
அடுத்ததாக, அந்தக் கலியாணத்துக்கு இயேசுவும் அவருடைய சீஷரும் அழைக்கப்பட்டிருந்தார்களாம், ஏனென்றால் அந்த கலியாணம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததே அவர்களுக்காகத்தான், அங்கு மணவாளன் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, மணவாட்டி அவரின் ரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் - பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் - வெளி 19:9
அடுத்ததாக, பரலோகத்தின் தேவன்[இயேசுவின் தாய்] தன் குமாரனிடம், அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்று சொன்னது, தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களின் ஆத்ம ரட்சிப்புக்காக செய்யப்பட வேண்டிய விலைக்கிரயத்தை குறிக்கிறது, அது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ரத்தமே, அவரின் ரத்தமேயன்றி வேறொன்றும் மனுகுலத்தின் பாவத்தை போக்காது, அதனால் தான் பரலோகத்தின் தேவன் தன் குமாரனிடம் "அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை" என்றார் - 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார் - யோவான் 2:3-4
இப்படியாக உவமைகள் நிறைந்த அந்த கானா ஊர் கலியாணத்தில், பிதாவும் குமாரனும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, வேலைக்காரர்கள் என்று சிலரை பார்க்க முடிகிறது, அவர்கள் பிதாவாகிய தேவனுக்கும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் வேலைக்காரர்களாக இருக்கலாம், ஆனால் நமக்கோ தேவனால் அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராய் இருக்கிறார், அவர்களுக்கு பிதாவாகிய தேவன் முதலாவது கட்டளை கொடுக்கிறார் [அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி], அடுத்து குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் கட்டளை கொடுக்கிறார் [இயேசு வேலைக்காரரை நோக்கி], அவர்களே திராட்சரசத்தை மொண்டு கொடுத்தார்கள், இப்படி பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் என்கிற திரியேக தேவனால் நாம் பெற்றுக் கொண்டது தான் இந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு - 5.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6.யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7.இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள் - யோவான் 2:5-8
முடிவை நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், பிதாவினால் அழைக்கப்பட்டிருந்த சீஷர்கள் திராட்சரசத்தினால் திருப்தி அடைந்திருந்தார்கள், அது மாத்திரம் இல்லாமல், வேலைக்காரர்களின் உதவியுடன் [பரிசுத்த ஆவியானவரின் கிருபையினால்] மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகளாய் அதாவது மணவாட்டியாய் மாறியிருந்தார்கள் - 9.அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10.எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11.இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் - யோவான் 2:9-11
இதுவே, பிதாவாகிய தேவன்[இயேசுவின் தாய்] தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு[மணவாளனுக்கு] ஒழுங்கு செய்திருந்த கானா ஊர் கலியாணம், சீஷர்கள் தேவனுடைய வேலைக்காரர்களின்[பரிசுத்த ஆவியானவரின்] உதவியுடன் அதை சுதந்தரித்துக் கொண்டார்கள், பந்திவிசாரிப்புக்காரர்களினோலோ ருசி பார்க்க மாத்திரமே முடிந்தது, மேலும் அந்த பந்திவிசாரிப்புக்காரர்களுக்கு அந்த ருசி நிறைந்த திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்றும் தெரியாது, அது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தினால் உண்டானது.
தொடர்ந்து படிக்க ஸ்திரீயே என்று ஏன் அழைத்தார்?
முந்தைய பாகத்தை படிக்க இதுமுதல் காண்பீர்கள்