என்னைத் தொட்டது யார்?
என்னைத் தொட்டது யார்?
முந்தைய பாகம்: இரையாதே, அமைதலாயிரு!
பரலோகத்தின் தேவன் இந்த பூமிக்கு வந்த பொழுது, அவரை ஆராதிக்க கட்டப்பட்ட தேவாலயமே, அவருக்கு ஏதிராக செயல்பட்டது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? ஆனால் உண்மையில் அது தான் நடந்தது!, எப்படியெனில் இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த பொழுது, அவரை யாராவது தேவனுடைய குமாரன் என்று சொன்னால், அவர்களை ஜெபஆலயத்துக்குள் அனுமதிக்க கூடாது என்று யூதர்கள் கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள் - யோவான் 9:22
அதில், மிகவும் தீவிரமாக இருந்தது, பரிசேயர் என்கிற அதிதீவிரமான மதப்பிரிவை சேர்ந்தவர்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது - ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர் நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள் - யோவான் 12:42
அப்படி தலைமை சபையே, இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமாக கட்டுப்பாடு விதித்திருந்த சூழ்நிலையில் தான், ஒரு ஜெபஆலயத்தலைவன் ஒருவன் இயேசுவை தேடி வந்து, அவரின் பாதத்தில் விழுந்து, தன்னுடைய மகளுக்காக வேண்டிக் கொண்டார் - 22.அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: 23.என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 24.அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று அவரை நெருக்கினார்கள் - மாற்கு 5:22-24
லூக்கா சுவிசேஷ புத்தகம், இந்த சம்பவத்தை குறித்து சொல்லும் பொழுது, அந்த யவீருவின் மகள் பன்னிரண்டு வயதுள்ள "ஒரே குமாரத்தி" என்று சொல்லுகிறது, ஒருவர் வயது முதிர்ந்தவராகவும், இனிமேல் வேறு குழந்தைகள் பிறக்க வாய்ப்பு இல்லை என்ற சூழ்நிலையில் தான், அவரது மகளை குறித்து சொல்லும் பொழுது "ஒரே குமாரத்தி" என்று குறிப்பிடுவார்கள், அப்படி வயது முதிர்ந்தவராக இருந்த யவீரு தான் இயேசுவின் பாதத்தில் விழுந்து தன்னுடைய மகளுக்காக வேண்டிக் கொண்டார் - 41.அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய "ஒரே குமாரத்தி" மரண அவஸ்தையாயிருந்தபடியால், 42.தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள் - லூக்கா 8:41-42
ஆனால், அந்த நேரத்தில் தானே, யவீருவின் மகள் நோயின் கொடுமையினால் மரித்து போய்விட்டாள், மகள் மரித்துப் போனது யவீருவுக்குத் தெரியாது, அவர் தன் மகள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறாள், அதனால் இயேசு வந்து அவளைக் குணப்படுத்த முடியும் என்று நினைத்தார்; ஆனால், கர்த்தரோ எல்லாவற்றையும் அறிந்திருந்தார், தான் யவீருவின் வீட்டிற்குச் சென்று மகளை மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார், அதற்கு யவீரு கர்த்தர் மேல் அசைக்க முடியாத விசுவாசம் வைக்க வேண்டும், அப்பொழுது தான் இன்னொரு அற்புதம் நடந்தது - 25.அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, 26.அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, 27.இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; 28.ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 29.உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள் - மாற்கு 5:25-29
இதற்கிடையில், யவீருவின் மகள் இறந்துவிட்டாள் என்ற செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சிலர் வந்து கொண்டிருந்தார்கள், மேலும் யவீருவின் வீட்டை நெருங்கும் போது தாரை ஊதுகிறவர்களின் சத்தத்தையும், அழுது புலம்பும் சத்தத்தையும் யவீரு கேட்பார் என்பதையும், மகள் இறந்த செய்தியை சொல்ல வருகிறவர்களும் சில நிமிடங்களில் வந்து விடுவார்கள் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.
இதை எல்லாம் கேட்டால், யவீரு மிகுந்த வேதனைக்குள்ளாகி, தனது விசுவாசத்தை விட்டுவிட்டு, தன் ஒரே மகளைப் பார்க்கவும், தன்னுடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லவும், அவசரமாக ஓடிவிடுவார் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், உதிரபோக்கு வியாதியில் இருந்து சுகம் பெற்றவளை "என் வஸ்திரத்தைத் தொட்டது யார்?" என்று கேட்டு சாட்சி சொல்ல அழைத்தார், சாட்சியை கேட்டு யவீரு விசுவாசத்தில் பலப்பட வேண்டும் என்பதற்காகவும், மார்பில் அடித்துக்கொண்டு ஓடாமல் இருக்கவும் வேண்டும் என்பதற்காகவே கர்த்தர் இப்படிச் செய்தார் - 30.உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். 31.அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32.இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். 33.தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். 34.அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார் - மாற்கு 5:30-34
கர்த்தரின் வஸ்திரத்தைத் தொட்டவளின் சாட்சி
லூக்கா சுவிசேஷ புத்தகத்தில், கர்த்தரின் வஸ்திரத்தைத் தொட்டு சுகம் பெற்றவளை குறித்துச் சொல்லும் பொழுது, அவள் ஆஸ்திகளையுடையவளாய் இருந்தாள் என்று சொல்லப்பட்டுள்ளது, அப்படியென்றால், அவள் அந்த ஊராருக்கு நன்றாய் அறிமுகமானவளாகவும், யவீருவுக்கும் தெரிந்தவராகவும் தான் இருந்தார், அப்படிப்பட்ட ஒருவரை தான் கர்த்தர் சாட்சி சொல்ல அழைத்தார் - 43.அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, 44.அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. 45.அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். 46.அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். 47.அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். 48.அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார் - லூக்கா 8:43-48
அவள் தன்னுடைய சாட்சியை சொல்லும் பொழுது, முதலாவது தான் ஆஸ்திகளோடு இருந்த பொழுது மக்களிடையே தனக்கிருந்த மதிப்பையும் கனத்தையும் குறித்துச் சொன்னாள், அதன் பின்பு கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்த இரத்தப்போக்கு வியாதியினால், எப்பொழுதும் தீட்டுப்பட்டவளாக, யாரும் தொடக்கூடாதவளாக மாறி, எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட பரிதாபமான நிலையை குறித்தும் சொன்னாள்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், எல்லோராலும் ஒதுக்கப்பட்டவளாகவும் மரண விளிம்பில் இருந்தபோது, இயேசு எங்கள் கிராமத்திற்கு வந்திருப்பதை நான் அறிந்தேன், இயேசு தொட்டால் குஷ்டரோகிகள் கூட குணமடைகிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன். ஆனால், மோசேயின் சட்டப்படி நான் தீட்டுப்பட்டவளாகிய நான் யாரையாவது தொட்டால் அவர்களும் தீட்டுப்பட்டுவிடுவார்கள். அப்படியிருக்க, என்னைத் தொடுமாறு எப்படி அவரிடம் கேட்பது? அதனால், அவருக்குத் தெரியாமலே அவரைத் தொட முடிவு செய்தேன். அவர் எங்கள் தெருவை கடந்துச் செல்லும் பொழுது, கூட்டத்தோடு கூட்டமாகச் சென்று அவருடைய வஸ்திரங்களை தொட்டேன், நான் தொட்ட அந்தத் கணமே எனக்கு சுகம் உண்டானது, நடக்க கூட முடியாமல் இருந்த என்னால் இப்போது ஓடவும் மற்றும் குதிக்கவும் முடிகிறது என்று சாட்சி சொன்னாள்.
தொடர்ந்து, அவள் யவீருவை நோக்கி, கர்த்தரின் வஸ்திரத்தைத் தொட்ட எனக்கே சுகம் கிடைத்தது என்றால், அவரின் பாதம் வீட்டில் பட்டால் எவ்வளவு அற்புதங்கள் நடக்கும், எனவே தைரியமாக அவரை அழைத்துச் செல் என்று யவீருவுக்கு ஆலோசனையும் சொன்னாள், இதை கேட்ட யவீருவுக்கு, என் மகளுக்கும் இந்த சுகவாழ்வு வேண்டும் என்கிற ஆசை உண்டானது, அது விசுவாசமாய் அவனுக்குள் வளர்ந்தது, இயேசு கிறிஸ்து தனது மகளின் வாழ்க்கையில் நிச்சியமாகவே அற்புதம் செய்வார் என்கிற அசைக்க முடியாத விசுவாசத்தை கொடுத்தது, அதனால் தான் தன் மகளின் மரண செய்தியை கேட்ட பொழுதும், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்று சொன்ன பொழுதும், இயேசு கிறிஸ்துவை நோக்கி பார்ப்பவராகவே இருந்தார் - 35.அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். 36.அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37.பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல் - மாற்கு 5:35-37
மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்
மகளின் மரண செய்தியை கேட்ட யவீரு, இயேசுவை விட்டு விட்டு மகளை காணவோ அல்லது தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லவோ ஓடவில்லை, மாறாக இயேசுவுடன் தன் வீட்டுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார், அதற்குள்ளாக யவீருவின் வீட்டில் பெரிய கூட்டம் கூடி விட்டது, அவர்கள் அனைவரும் அடக்கத்திற்கு வந்திருந்தவர்கள், அவர்கள் மத்தியில், யவீருவின் இருதயத்தில் மாத்திரம் இயேசு என் மகள் மகளுக்கு அற்புதம் செய்யவேண்டும், அவரால் செய்யவும் முடியும் என்கிற விசுவாசம் இருந்தது, இப்படி யவீருவை விசுவாசத்தில் பலப்படுத்தி, அவன் மகளை உயிரோடு எழுப்பினார் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து - 38.ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39.உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40.அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41.பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42.உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார் - மாற்கு 5:38-42
நாடித்துடிப்பு அடங்கி, கண்கள் செருகி, சில்லிட்டிருந்த சரீரத்தில் உயிர் திரும்ப வந்தது மாத்திரம் இல்லாமல், சரீரத்தில் இருந்த வியாதியின் அறிகுறியும் இல்லாமல் போய் இருந்தது, அதனால் தான் பெற்றோர்கள் உட்பட அறைக்குள் இருந்த அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்களாம்.
அது மாத்திரம் இல்லாமல், வரும் வழியில் பன்னிரண்டு வருடமாய் உதிரபோக்கு வியாதியினால் வேதனை பட்டவளை குணப்படுத்தி, அவளை சாட்சி சொல்லவைத்து யவீருவின் விசுவாசத்தை வர்த்திக்க செய்தது, அவர்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது, மேலும், யவீருவிற்கு, தன் மகள் பிழைக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது, ஆனால் நம் தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கோ இரட்சிப்பே நோக்கமாய் இருக்கிறது, அதாவது நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதே நோக்கமாய் இருக்கிறது, அதனால் தான் இரட்சிப்பை குறித்துப் பேசினார் - இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார் - லூக்கா 8:50
மரித்து உயித்தெழுந்த ஒரே மகளுக்கு பெற்றோர் ஆகாரங்கொடுக்காமலா இருப்பார்கள்? பின்பு ஏன் இயேசு கிறிஸ்து யவீருவின் மகளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்? இயேசு கிறிஸ்து ஆகாரங்கொடுங்கள் என்று சொன்னது, நம் நித்தியஜீவனுக்கான ஆகாரத்தை குறித்ததாய் இருந்தது, அதாவது நாம் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அடையவேண்டும் என்பதாய் இருந்தது - 48.ஜீவ அப்பம் நானே - யோவான் 6:48
அடுத்த பாகம்: இப்பொழுது மொண்டு, கொண்டுபோங்கள்