அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை
அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை
முந்தைய பாகம்: இயேசுவின் மகத்துவங்கள்
அப்போஸ்தலனாகிய யூதா, இவ்வுலகப் பாவகாரியங்களையும், அதின் விளைவையும் குறித்து ஒவ்வொன்றாக சொல்லி வரும் பொழுது, பழைய ஏற்பாட்டின் தேவமனுஷனாகிய மோசே கூட இந்த பாவக்கட்டிலிருந்து தன்னை காத்துக் கொள்ள முடியவில்லை, அதனால் தான் மோசேயினுடைய சரீரத்தின் மேல் பிசாசு உரிமை கொண்டாடினான் என்று எழுதியுள்ளார் - 6.தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார். 7.அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். 8.அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள். 9.பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான் - யூதா 1:6-9
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணுவது போல, மனிதனின் பாவ காரியமானது அந்த மனிதனையே நரகத்தில் தள்ளுவதாய் இருக்கிறது, இதற்கு மேன்மையாய் கருதப்பட்ட மோசேயும் விளக்கு அல்ல என்பதை தான் அப்போஸ்தலனாகிய யூதாவின் புத்தகத்தில் பார்க்கிறோம்.
காரியம் இப்படி இருக்கும் பொழுது, யார் தான் நம்மை இரட்சிக்க முடியும்? அதனால் தான், தேவனே இந்த பூமிக்கு வந்தார். முழுக்க முழுக்க பரிசுத்தராய் வாழ்ந்து, மோசேயினுடைய சரீரத்தின் மேல் உரிமை கொண்டாடின பிசாசு, என்னுடைய சரீரத்தின் மேல் உரிமை கொண்டாட முடியாது, அவனுக்கு என்னிடத்தில் எந்த பங்கும் இல்லை என்று சொல்லி, தன்னையே நமக்காக ஜீவபலியாக அர்ப்பணித்தவர் தான், நம் பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்து - 28.நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 29.இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். 30.இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. 31.நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார் - யோவான் 14:28-31
அடுத்த பாகம்: அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்து